செய்யாறில் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையின் புதிய கட்டடத்தை மக்கள்
பயன்பாட்டுக்காக உடனடியாகத் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
இந்தச் சங்கத்தின் செய்யாறு வட்ட பேரவைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் எம்.வேலாயுதம் தலைமை வகித்தார். செயலர் ஆர்.நாராயணன், பொருளாளர் எம்.தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தின் போது, மீட்டர் பொருத்தாமல் விவசாயத்துக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்க வேண்டும். எந்த விதமான புதிய விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் நியாயவிலைப் பொருள்கள் வழங்க வேண்டும். நெல் ஒரு மூட்டைக்கு ரூ.2 ஆயிரமும், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமும் என விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
134, 339, 428, 201 ஆகிய வழித்தடங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகம் செய்யாறு பணிமனை நிர்வாகம் தன்னிச்சையாக செயல்பட்டு பயணிகளிடம் விரைவுப் பேருந்து கட்டணத்தை வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்.
தடம் எண்.305 வேலூர் - செய்யாறு - கும்பகோணம், தடம் எண்.235 செய்யாறு - திருவண்ணாமலை, தடம் எண்.86 திண்டிவனம் - வேலூர் ஆகிய வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்கி பயணிகளுக்கு உதவிட வேண்டும். செய்யாறு - பிரம்மதேசம் - ஒச்சேரி, பிரம்மதேசம் - ஒச்சேரி, பிரம்மதேசம் - வெம்பாக்கம் ஆகிய புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், துணைத் தலைவர்கள் எம்.ஆறுமுகம், வி.ஜெயபால், டி.மண்ணு, எம்.மாரி, துணைச் செயலர்கள் எம்.ஆதிகேசவன், பி.சுப்பிரமணியன், மாணிக்கவேல், எஸ்.பி.முருகன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.