திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் ஊராட்சிப் பகுதியில் தனிநபர் இல்லக்கழிப்பறைகள் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தொடக்கி வைத்தார்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அய்யம்பாளையம் ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் தூய்மை பாரத இயக்கம் சார்பில், திறந்த வெளியில் மலம் கழித்தலில் இருந்து விடுதலை பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகித்து, சுகாதாரம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தார்.
தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் பணி: இதைத் தொடர்ந்து, தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் பணியைத் தொடங்கிவைத்து, தொழிலாளர்களுடன் சேர்ந்து மண் வாரும் பணியில் ஆட்சியர் மு.வடநேரே ஈடுபட்டார்.
நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, உதவித் திட்ட அலுவலர் பா.ஜெயசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்குமார், செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவிப் பொறியாளர்கள் ரவிச்சந்திரன், ராஜலட்சுமி, அருணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.