திருவண்ணாமலை மாவட்டத்தின் 860 ஊராட்சிகளிலும் செவ்வாய்க்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் இந்தக் கூட்டங்களில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்குக் காய்ச்சலைத் தடுப்பது, குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதேபோல, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் அனைத்து இலவச பொருள்களும் சிறப்புப் பயிற்சி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கும் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்பன உள்பட 16 பொருள்கள் குறித்து கிராம சபையில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்தக் கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.