திருவண்ணாமலையில் இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கம், அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில், வரும் புதன்கிழமை (ஆக.16) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மத்திய - மாநில அரசுகளின் விவசாய விரோதப் போக்கைக் கண்டித்து, திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே காலை 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி தலைமை வகிக்கிறார். வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம், எம்எல்ஏக்கள் கே.வி.சேகரன், மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், திமுக விவசாய அணி துணைச் செயலர் டேம்.வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசுகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு முழுமையான வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு சேர வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை உடனே பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.