ஆரணி தலைமை அஞ்சலக அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலக ஊழியர்கள் 4-ஆவது நாளான சனிக்கிழமை பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த புதன்கிழமை தொடங்கியது.
கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும், இலாகா ஊழியர்களுக்கு இணையான சலுகைகளை கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.
இந்தப் போராட்டத்தின் 4-ஆவது நாளான சனிக்கிழமை ஆரணி தலைமை அஞ்சலக அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் கிராம அஞ்சலக ஊழியர்கள், அஞ்சலக அலுவலகம் முன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு அஞ்சலக ஊழியர் சங்கத் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். செயலர் முனியன், பொருளாளர் டேவிட், ஆலோசகர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.