மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வந்தவாசி வட்டக்குழு சார்பில், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
நிறுத்தப்பட்ட முதியோர், விதவை, ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
உதவித்தொகை வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை முடக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் இயக்கம் என்ற பெயரில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு வந்தவாசி வட்டச் செயலர் ஜா.வே.சிவராமன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எம்.சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் பெ.அரிதாசு, கி.பால்ராஜ், இரா.பாரி, சு.சிவக்குமார், அ.அப்துல்காதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், போராட்டத்தில் பங்கேற்றோர் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முரளிதரனிடம் உதவித் தொகைகளை வழங்க கோரி மனு அளித்தனர்.