குடிமைப்பணிக்கான தேர்வில் (ஐஏஎஸ்) வெற்றி பெற்ற போளூரைச் சேர்ந்த மாணவி ஜெ.விஜயலட்சுமிக்கு ஆரணி தாலுகா அனைத்து நாயுடுகள் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
போளூரைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், விஜயலட்சுமி பாத்திரக்கடையின் உரிமையாளருமான ஜெயகுமார் என்பவரின் மகள் விஜயலட்சுமி நடந்து முடிந்த குடிமைப்பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றார்.
தொடக்கக் கல்வியை போளூரில் பயின்ற விஜயலட்சுமி, மேல்நிலைக் கல்வியை திருவண்ணாமலையிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். அரசுப் பள்ளியில் பயின்றாலும் மத்திய அரசின் குடிமைப்பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றதால், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், ஆரணி தாலுகா அனைத்து நாயுடுகள் சங்கம் சார்பில் விஜயலட்சுமிக்கு பாராட்டு விழா மண்டி வீதியில் உள்ள தனியார் மஹாலில் நடத்தப்பட்டது. மேலும், இந்த விழாவில் 10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களையும் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
இதில், திருவண்ணாமலை மாவட்ட அனைத்து நாயுடுகள் சங்கத்தின் தலைவர் வி.நடராஜன்நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
ஏற்பாடுகளை ஆரணி தாலுகா அனைத்து நாயுடுகள் சங்கத்தின் தலைவர் பி.என்.ரமேஷ்பாபு நாயுடு, பொருளாளர் பி.ஜெ.சீனிவாசன்நாயுடு ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் பள்ளி குழந்தைகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.