திமுகவினர் அனைவரும் மொழி உணர்வோடு இருக்க வேண்டும் என்று திருவண்ணாமலை எம்எல்ஏ எ.வ.வேலு பேசினார்.
திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு தலைமை வகித்தார்.
வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை வரவேற்றார்.
தெற்கு, வடக்கு மாவட்ட இளைஞரணி ஒன்றிய, நகர, பேரூர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களிடம் இளைஞரணி துணைச் செயலர் அசன் முகமது ஜின்னா, இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டங்கள், விழாக்கள், போராட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எ.வ.வேலு எம்எல்ஏ பேசியதாவது:
திமுகவில் பல அணிகள் இருந்தாலும் இளைஞரணி தான் சிறப்பாக செயல்படுகிறது. அசைத்துப்பார்க்க முடியாத அணியாக இளைஞரணி செயல்படுகிறது.
திமுகவினர் அனைவரும் மொழி உணர்வோடு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நாம் தாய் உறவை இழப்பதற்குச் சமம். தாய் உறவுக்கு இணையானது நம் தமிழ் மொழி. எனவே, தமிழ் உணர்வு உங்களுக்கு இருக்க வேண்டும். இந்தியாவிலேயே முதல் முதலில் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தவர்
மு.க.ஸ்டாலின்தான் என்றார்.
கூட்டத்தில், தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி, மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், வடக்கு மாவட்ட அவைத் தலைவர் கே.ஆர்.சீத்தாபதி, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பொன்.தனசு, அ.அருள்குமரன், சு.விஜி (எ) விஜயராஜ் மற்றும் வடக்கு, தெற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.