திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம் சார்பில், 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.குப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ.என்.சுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் மு.சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கெளரவத் தலைவர் எம்.முருகன் வரவேற்றார்.
மாநிலத் தலைவர் சி.ஜோதிமணி, மாநில பொதுச் செயலர் வி.எல்.மூர்த்தி, துணைத் தலைவர் ஏ.வி.பிச்சைமுத்து, மாவட்ட சட்ட ஆலோசகர்கள் கே.லிங்கநத்தம், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சி.செல்வம், ஏ.சேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
போராட்டத்தின்போது, தமிழகத்திலுள்ள ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 2013 அக்டோபர் 31-ஆம் தேதி பணி நியமனம் செய்யப்பட்டு 3 ஆண்டு பணி முடித்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய மாதம் ரூ.500 வழங்க வேண்டும்.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு 2 சீருடைகள், டார்ச் லைட், சைக்கிள் வழங்க வேண்டும் என்பன உள்பட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
காலை 10 முதல் மாலை 5 வரை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.