திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிந்தனைச் சாரல் - 41 என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தொழிலதிபர் ஆகாஷ் முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். முருகையன் நினைவு மாதிரிப் பள்ளித் தாளாளர் சீனி.கார்த்திகேயன், நூலக ஆர்வலர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் நிலை நூலகர் பெ.வள்ளி வரவேற்றார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு காமராஜர் பிறந்த நாள் விழா பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வென்ற, கலந்து கொண்ட திருவண்ணாமலை அமராவதி முருகையன் நகராட்சி மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.
பாவலர் வையவன் எழுதிய கிறுக்கும்... நறுக்கும் என்ற நூலை ஆய்வாளர் இரா.ப.அண்ணாதுரை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். இதில், நல்நூலகர் சாயிராம், ஆசிரியர் அ.நாராயணன், மைய நூலக நூலகர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், வாசகர்கள், எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.