பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் அமிர்தலிங்கம், கலையரசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். இடைக்கால நிவாரணம் 20 சதவீதத்தை உடனே வழங்க வேண்டும் ஆகிய 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.