வந்தவாசியில் உள்ள ஓம் ஸ்ரீஜெய்சக்தி பீட காளியம்மன் கோயிலில் ஆடிப்பூர திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை கோமாதா பூஜை, கணபதி ஹோமம், பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.
மேலும், தடாகத்தில் தெப்பல் பவனி திருக்கோல அலங்காரத்தில் மூலவர் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கோயில் வளாகத்தில் ஊரணி பொங்கல் வைத்தனர். மேலும் அன்னதானம், தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் கோயில் அறக்கட்டளைத் தலைவர் எ.செல்வராஜ், கோயில் நிர்வாகி சிவா மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.