செங்கம் அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தில் கடந்த ஓராண்டாக குடிநீர் பிரச்னை நீடித்து வருகிறது.
அப்பகுதி ஊராட்சி நிர்வாகத்திற்கு உள்பட்ட கிணறுகளில் தண்ணீர் இருந்தும் அதை முறையாக மக்கள் பயன்பாட்டிற்கு விடவில்லை என ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும், அலுவலகம் முற்றுகை, சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.
போராட்டங்கள் நடைபெறும்போது அதிகாரிகள் சில தினங்களில் சரிசெய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டுச் செல்கின்றனராம். ஆனால், அதன்பிறகு பிரச்னை குறித்து கண்டுகொள்வதில்லையாம்.
இந்நிலையில் ஆத்திரமடைந்த பக்கிரிபாளையம் கிராம மக்கள் புதன்கிழமை திரண்டு வந்து செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரன் பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊராட்சிச் செயலாளர் மற்றும் குடிநீர்த் தொட்டி இயக்குபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.
இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் ஒருமணி நேரம் பரபரப்பு நிலவியது.