கலசப்பாக்கம், தண்டராம்பட்டில் குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்

கலசப்பாக்கம்,  தண்டராம்பட்டு பகுதிகளில் குடிநீர் வழங்கக் கோரி, திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

கலசப்பாக்கம்,  தண்டராம்பட்டு பகுதிகளில் குடிநீர் வழங்கக் கோரி, திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
கலசப்பாக்கம் அருகே உள்ள அணியாலை, காம்பட்டு கிராமங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த இரு கிராமங்களில் கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில்லையாம்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் இரு கிராம மக்களும் திங்கள்கிழமை அணியாலை கிராமத்தில் இருந்து பாடகம் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி, கலசப்பாக்கம் போலீஸார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் குடிநீர் விநியோகம் சீர்செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
தண்டராம்பட்டில்...: இதேபோல, தண்டராம்பட்டு அடுத்த ரெட்டியார்பாளையம் கிராமத்தில் சில மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில்லையாம். இதனால் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் தானிப்பாடி - அரூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் பரிதிமால், தானிப்பாடி போலீஸார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பழுதடைந்த ஆழ்துளைக் கிணறுகளைச் சீரமைத்து இரண்டு நாள்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com