கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் வழங்கக் கோரி, வட்டார வளர்ச்சி அலுவலரின் வாகனத்தை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், நாரியமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்டது கார்ணாம்பூண்டி கிராமம். இங்குள்ள காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களுக்கு அண்மைக் காலமாக சரிவர குடிநீர் விநியோகம் செய்வதில்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திலும் பல முறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், குடிநீர் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன் திங்கள்கிழமை கார்ணாம்பூண்டி கிராமத்துக்கு வந்தார்.
தகவலறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரின் ஜீப்பை மறித்து, காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, 2 கி.மீ. தொலைவில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து குழாய் அமைத்து கிராமத்துக்கு குடிநீர் கொண்டு வந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) விநியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன் உறுதியளித்தார். இதனையடுத்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.