தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 150 நாள்கள் வேலை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம்
திங்கள்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த தெள்ளாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் வந்தவாசி - தெள்ளாறு வட்டக் குழுக்கள் கிளைச் செயலர் த.மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மு.பிரகலநாதன், வட்டச் செயலர் ந.ராதாகிருஷ்ணன், வட்டக் குழு உறுப்பினர்கள் ரா.ராமகிருஷ்ணன், சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், தெள்ளாறு ஒன்றியத்தில் முடங்கியுள்ள தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை உடனே தொடங்க வேண்டும், ரூ. 205-ஐ ஊதியமாக வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு 2017-ஆம் ஆண்டுக்கான புதிய வேலைப் பதிவேடு அட்டைகளை உடனே வழங்க வேண்டும், இந்தத் திட்டத்தில் ஏரி, குளங்களைத் தூர்வாரி நீர்நிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 150 நாள்கள் வேலை வழங்கக் கோரி, தெள்ளாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.