ஆரணி அரசு மருத்துவமனையில் அம்மா ஆரோக்கியத் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.
இதையடுத்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது: அம்மா ஆரோக்கியத் திட்டம் என்பது 30 வயது நிறைந்த அனைவரும் பூரண உடல் நலத்துடன் வாழ வழிவகை காணும் வகையில் செயல்படுத்தப்படும் ஒரு முன்னோடித் திட்டமாகும்.
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2016 மார்ச் 1- ஆம் தேதியன்று இந்தத் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.
இந்தத் திட்டமானது தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்தத் திட்டமானது 98 மாவட்ட, வட்ட மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுவதற்காக போதிய அளவில் அந்தந்த மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 385 வட்டார அளவில் உள்ள 30 படுக்கை வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தேவையான உபகரணங்களை கொள்முதல் செய்து கொள்ள ரூ.10 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இதேபோல, புதிதாக திறந்துள்ள மற்றும் திறக்க இருக்கும் அரசு மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு தமிழக அரசு ரூ.70 கோடியை ஒதுக்கியுள்ளது. ஏழை, எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.
இதையடுத்து, குழந்தை பெற்ற பெண்களுக்கு குழந்தை பயன்பாடு பொருள்கள் மற்றும் ஆரோக்கிய திட்டத்துக்கான அட்டைகளை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி வே.ஏழுமலை, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பி.ரத்தினசாமி , மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் பி.கிரிஜா, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் வழக்குரைஞர் சங்கர், அ.கோவிந்தராசன், பேரவை நிர்வாகி பாரிபாபு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட துணைச் செயலர் டி.கருணாகரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், மாவட்ட நலப் பணிகள் துணை இயக்குநர் என்.ராஜேந்திரன், அரசு மருத்துவர்கள் எஸ்.ஜெயப்பிரகாஷ், ஜெ.கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.