அரசு வேலைக்காக இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து இளைஞர்கள் ஏமாற வேண்டாம் என்று மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி அறிவுரை வழங்கினார்.
தானிப்பாடியை அடுத்த நாவக்கொல்லை கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு தண்டராம்பட்டு வட்டாட்சியர் சஜேஷ்பாபு தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 809 மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர், 133 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி சா.பழனி பேசியதாவது:
வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு பட்டா வழங்க வனத் துறையிடம் பேசி வருகிறோம். இந்தப் பகுதிக்கு பேருந்து வசதி விரைவில் ஏற்படுத்தித் தரப்படும்.
குழந்தைகள் பிறந்த உடனே பிறப்புச் சான்றை கேட்டு வாங்க வேண்டும். நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கும்போது, அவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். அரசு வேலைக்காக இளைஞர்கள் இடைத்தரகர்களை நாடிச் செல்ல வேண்டாம். அவர்களிடம் பல லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாற வேண்டாம். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, தனியார் நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்றார்.
முகாமில் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.