போளூரை அடுத்த கானமலை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஜவ்வாதுமலை ஒன்றியம், கானமலை ஊராட்சியில் ஆய்வு செய்த ஆட்சியர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன், அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர், போளூரை அடுத்த அனந்தபுரம் ஊராட்சியைச் சேர்ந்த முருகாபாடி புதூர் - கானமலை வரையிலான சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு விரைவில் சாலை வசதி அமைக்கபட உள்ளதாகவும், கானமலை பகுதியில் குடிநீர்ப் பிரச்னையைத் தடுக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் இந்தப் பகுதியில் தடுப்பணைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்தார். அப்போது, வனத் துறை, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை என பல்வேறு துறைகளின் அலுவலர்கள் உடனிருந்தனர்.