செங்கம் அருகே விவசாயக் கிணற்றைத் தூர்வாரியபோது மண் சரிவில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார்.
செங்கத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயராமன். இவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணியில் இதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ஏழுமலை (37) செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தார்.
கிணற்றினுள் மண் அள்ளும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மண் சரிந்து விழுந்ததாகத் தெரிகிறது. இதில் சிக்கிய ஏழுமலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். எனினும், அங்கு ஏழுமலை உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சித்ரா அளித்த புகாரின்பேரில், செங்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.