ஆரணியை அடுத்த சேவூர் பி.ஆர்.நகர் பகுதியில் உள்ள தனியார் பஞ்சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர்கள் 7-ஆவது நாளாக புதன்கிழமையும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணியை அடுத்த சேவூர் பி.ஆர்.நகர் பகுதியில் உள்ள தனியார் பஞ்சாலையில் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு அவர்களுக்குண்டான தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள தொழிலாளர்கள், தொடர்ந்து 7-ஆவது நாளாக புதன்கிழமையும் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.