பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் உயிரிழந்தார்.
திருவண்ணாமலையை அடுத்த மேல்பாலானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ரமேஷ் (35). சென்னையில் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த சில நாள்களாக மர்மக் காய்ச்சல் ஏற்பட்டதாம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றும் காய்ச்சல் குறையவில்லையாம். இதையடுத்து, அவரது ரத்த மாதிரியை சோதித்தபோது, அவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த ரமேஷ் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தார். ரமேஷுக்கு மனைவி, ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இதனிடையே, மேல்பாலானந்தல் கிராமத்தில் வேறு யாருக்கும் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் விதமாக மருத்துவக் குழுவினர் அங்கு முகாமிட்டு, மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.