செய்யாறை அடுத்த கொருக்காத்தூர் கிராமத்தில் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி, கிராம மக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொருக்காத்தூர் கிராமத்தில் நூலகம், மேல்நிலைப் பள்ளி, வங்கி மற்றும் குடியிருப்பு ஆகியவற்றுக்கு அருகில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்தக் கடையில் மது அருந்துவோர் தினமும் அந்தப் பகுதியில் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனராம்.
இதன் காரணமாக பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், நூலகத்துக்கு படிக்க வரும் வாசகர்கள் மற்றும் கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கொருக்காத்தூரில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரணமல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முரளி மற்றும் போலீஸார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் மதுபானக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.