திருவண்ணாமலையில் உயர் மின் அழுத்தம் காரணமாக மின்சாதனப் பொருள்கள் எரிந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை - செங்கம் சாலையில் உள்ளது அக்னி தீர்த்தக் குளம். இந்தப் பகுதி சாலையோரம் புதன்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது, அங்குள்ள மின்கம்ப வயர்கள் அறுந்து ஒன்றுடன் ஒன்று உராய்ந்ததாம்.
இதன் காரணமாக ஏற்பட்ட உயர் மின் அழுத்தத்தால், அந்தப் பகுதி வீடுகளில் இருந்த மின்விசிறி, டியூப் லைட், தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்சாதனப்பெட்டி, வாஷிங்மெஷின் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் தீப்பற்றி எரிந்தன. இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த பொதுமக்கள், அக்னி தீர்த்தக்குளம் எதிரே பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை நகர போலீஸார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.