திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (மே 19) தொடங்கி, 31 வரை நடைபெறுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017-18 ஆம் கல்வி ஆண்டுக்கான அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் கலந்தாய்வு இணையம் மூலம் நடைபெறுகிறது.
இந்தக் கலந்தாய்வு மே 19 முதல் 31 வரை திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
முதல் நாளான வெள்ளிக்கிழமை அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் இட மாறுதல், வேறு மாவட்டங்களுக்கான இட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.
மே 20-ஆம் தேதி மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும், மே 22-ஆம் தேதி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் இட மாறுதல், வேறு மாவட்டங்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.
மே 23-ஆம் தேதி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும், மே 24-ஆம் தேதி மேல்நிலைப் பள்ளிகளின் முதுகலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் இடம் மாறுவதற்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.
மே 25-ஆம் தேதி மேல்நிலைப் பள்ளிகளின் முதுகலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான வேறு மாவட்டங்களில் இட மாறுவதற்கான கலந்தாய்வும், மே 27-ஆம் தேதி மேல்நிலைப் பள்ளிகளின் முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும், மே 28-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் இடம் மாறுவதற்கான கலந்தாய்வும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.
மே 29-ஆம் தேதி மாவட்டத்துக்குள் பட்டதாரி ஆசிரியர்கள் இடம் மாறுவதற்கான கலந்தாய்வும், மே 30-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுவதற்கான கலந்தாய்வும், மே 31-ஆம் தேதி இடைநிலை, உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.
கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து ஆசிரியர்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாளில், உரிய நேரத்துக்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்தார்.