திருவண்ணாமலை மாவட்டத்தில் எய்ட்ஸ் பாதிப்பால் ஏற்படும்
உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு - கட்டுப்பாட்டு அலகு சார்பில், எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் எய்ட்ஸ் பாதிப்பால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தலைமையிலான அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துறையினர் மெழுகுவர்த்தி ஏந்தி எய்ட்ஸ் பாதிப்பால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ஆட்சியர் மு.வடநேரே பேசியதாவது: எய்ட்ஸ் நோயாளிகளைப் புறக்கணிக்கக் கூடாது. திருவண்ணாமலை மாவட்டத்தை எய்ட்ஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நடமாடும் நம்பிக்கை மையங்கள் என மொத்தம் 84 மையங்களில் இலவசமாக எச்ஐவி பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என்றார் அவர்.
நிகழ்வில், நலப் பணிகள் இணை இயக்குநர் கீதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் கோவிந்தன், அசோக் (காசநோய்), குடும்ப நல இணை இயக்குநர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.