தண்டராம்பட்டு அருகே குடிநீர் வழங்கக் கோரி, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தண்டராம்பட்டு அருகே உள்ள தே.ஆண்டாப்பட்டு கிராமம், கே.கே.நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதுகுறித்து, தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால், பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வியாழக்கிழமை தண்டராம்பட்டு - அரூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த தானிப்பாடி போலீஸார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இரு தினங்களில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.