செங்கம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த மாடுகளைப் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் ரூ. 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தது.
செங்கம் நகரில் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், காய்கனி அங்காடி, உழவர் சந்தை, துக்காப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஏராளமான மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்து வருகின்றன. மேலும், அங்காடிக்குள் புகுந்து காய், கனிகள், காய்கறிகளை உண்பதால் விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இதனால், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து, செங்கம் பேரூராட்சி நிர்வாகத்தினர், சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை வியாழக்
கிழமை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு ரூ. 500 அபராதம் விதித்தனர். மேலும், இனிமேல் சாலைகளில் மாடுகளை அவிழ்த்துவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.