திருவண்ணாமலை அருகே உணவக உரிமையாளரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்தை வழிப்பறி செய்ததாக 8 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த நூக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் உணவக உரிமையாளர் சேகர் (43). இவர், திங்கள்கிழமை இரவு மங்கலம் கிராமத்தில் இருந்து பைக்கில் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
திருவண்ணாமலை - மங்கலம் சாலை, பாலானந்தல் கூட்டுச்சாலை அருகே சென்றபோது தீடீரென 8 பேர் கொண்ட மர்ம கும்பல் சேகரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டனராம்.
அப்போது, தன்னிடம் பணம் ஏதும் இல்லை என சேகர் கூறியதால் ஆத்திரமடைந்த 8 பேரும் சேர்ந்து சேகரை கடுமையாகத் தாக்கினராம். இதனிடையே, சேகரின் அலறல் சப்தத்தைக் கேட்டு பொதுமக்கள் அங்கு வந்துள்ளனர்.
இதனைப் பார்த்த மர்ம கும்பல், சேகரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாம். இதில், மர்ம கும்பலைச் சேர்ந்த ஒருவரும், சேகரும் மயங்கி விழுந்தனராம். இருவரையும் பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்த மங்கலம் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மர்ம கும்பல் சேகரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட இளைஞரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருவண்ணாமலை, நாவக்கரையைச் சேர்ந்த மோனிஷ் (19) என்பது தெரியவந்தது. இவர், அளித்த தகவலின்பேரில், கூட்டாளிகள் மேலும் 7 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.