வேட்டவலம் ஸ்ரீசிங்காரக்குள மாரியம்மன் கோயிலில் 161-ஆவது ஆண்டு தீமிதி திருவிழா, கூழ்வார்த்தல் திருவிழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலின் தீமிதி, கூழ்வார்த்தல் திருவிழா கடந்த 3-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து, தினமும் காலை, மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி, கூழ்வார்த்தல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்டவலம் ஜமீன்தார் மகேந்திர பண்டாரியார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், காலை 11 மணிக்கு பூங்கரகம், வேப்பிலை, சக்தி கரகம், தீச்சட்டி மற்றும் அலகுதேர் இழுத்து பக்தர்கள் மாட வீதியுலா வந்தனர்.
இதில், பொய்க்கால் குதிரை, பொம்மலாட்டம், கேரளா மேளம், பம்பை உடுக்கையுடன் மேளதாளங்கள் முழங்க கரக வீதியுலா நடைபெற்றது. இதையடுத்து, கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது.
பின்னர், மகா அபிஷேகம், அலங்காரப் பூஜை, தீபராதனை நடைபெற்றன. முடிவில் பக்தர்களுக்கு அன்ன தானம், மோர் வழங்கப்பட்டன. விழாவில், பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு ரிஷிப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் செந்தில்குமார், ராமானுஜம், பச்சையப்பன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.