சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு, வியாழக்கிழமை இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது.
முன்னதாக காலையில் கோயிலில் உள்ள கோபால விநாயகர், பெரியாழி, அங்காளம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையொட்டி, பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடி காணிக்கை அளித்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும், பொங்கல் வைத்தும் அம்மனை வழிபட்டனர்.
மாலையில் அங்காளம்மன் சாந்தசொரூபினியாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் தாரை, தப்பட்டை, பம்பை, உடுக்கை ஒலிக்க உலா வந்தார். நள்ளிரவு ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு தேங்காயில் கற்பூரம் ஏற்றி தீபாரதனை செய்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்தனர். மேலும், சேத்துப்பட்டு கலை இலக்கிய பண்பாட்டுக் கழகம் சார்பில், செல்வராசு தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம், வாணவேடிக்கை, இன்னிசை நிகழ்ச்சி, அன்ன தானம் ஆகியவை நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் புண்ணியமூர்த்தி மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.