திருவண்ணாமலை அருகே கிணற்றில் வெடி வைத்தபோது பறந்து வந்த கல் விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை வட்டம், மங்கலத்தை அடுத்த எரும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்மண்ணன். இவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் தண்ணீர் வற்றியதாம். எனவே, கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் கடந்த சில நாள்களாக அசோக்மண்ணன் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை கிணற்றில் தோட்டா மூலம் வெடி வைத்துள்ளனர்.
அப்போது, கிணற்றில் இருந்து தூக்கி வீசப்பட்ட கல் ஒன்று சுமார் 150 மீட்டர் தொலைவில் மற்றொரு விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த வள்ளியம்மாள் (50) மீது விழுந்ததாம். இதில் பலத்த காயமடைந்த அவர், அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து, மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.