திருவண்ணாமலையை அடுத்த கிளியாப்பட்டு ஊராட்சியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும், நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாமும் வியாழக்கிழமை நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பி.பி.முருகன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் டெங்கு கொசு எவ்வாறு உருவாகிறது, டெங்கு கொசு உற்பத்தியாகாமல் தடுக்கும் வழிமுறைகள், சுற்றுப்புறத் தூய்மை, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
பின்னர், பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை வட்டார வளர்ச்சி அலுவலர் பி.பி.முருகன் வழங்கினார். தொடர்ந்து, ஏராளமான கிராம மக்கள் நிலவேம்புக் குடிநீரை வாங்கிக் குடித்தனர். இதில், ஊராட்சிச் செயலர் செல்வராஜ் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.