இலவச சட்ட உதவி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மேட்டுப்பாளையம் பகுதியில் விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிக் குழு சார்பில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச சட்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் செயல்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பிரசாரம் மேட்டுப்பாளையம் அடுத்த சேரன் நகரில் நடைபெற்றது.
பிரசாரத்துக்கு மேட்டுப்பாளையம் நீதித் துறை நடுவர் சரவணபாபு தலைமை வகித்தார். இதில் வழக்குரைஞர்கள் சங்கச்செயலர் சிவக்குமார், மூத்த வழக்குரைஞர்கள் கனகசுந்தரம், செல்வகுமார் உள்பட பலரும் பங்கேற்றனர். மேலும், அப் பகுதியிலுள்ள வீடுகளுக்கு நேரில் சென்று பிரசுரங்களை வழங்கி, இலவச சட்ட உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
அப்போது நீதித் துறை நடுவர் சரவணபாபு பேசும்போது, ஏழ்மை காரணமாக மக்களுக்கு நீதி மறுக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு சார்பில் சட்டப் பணிக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் இலவச சட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
பொதுமக்கள் இங்கு வந்து அளிக்கும் மனுக்களுக்கு அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வழக்குரைஞர் மூலம் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றார் அவர்.