திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அஞ்சலகத்தில் ரூ. 2.27 லட்சத்தைக் கையாடல் செய்ததாக, பெண் ஊழியர் கணவருடன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
செய்யாறு அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தில் கிராமிய அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அஞ்சலகத்தில் வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த துர்கா (27),
கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். அஞ்சலகத்தில் கிராமிய அஞ்சலக சேமிப்புக் கணக்கு, ஆர்.டி. சேமிப்பு பிரீமியம் என பல வகையான திட்டங்களில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தியுள்ளனர். அஞ்சலகத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தை முறையாக ஆவணங்களில் பதிவு செய்யாமல் போலியாக கணக்குப் புத்தகத்தில் மட்டுமே பதிவு செய்து கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக அஞ்சலக வாடிக்கையாளர்களான கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில், ராணிபேட்டை அஞ்சலகக் கண்காணிப்பாளர் மணிகண்டன் பிரம்மதேசம் கிராமிய அஞ்சலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சுமார் ரூ. 2.27 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அஞ்சலக ஊழியர் துர்கா விடுமுறையில் இருக்கும் போது, அவருக்குப் பதிலாக அவரது கணவர் பாபு அஞ்சலகத்துக்குச் சென்று பணி மேற்கொண்டதும், அப்போது முதல் பணத்தைக் கையாடல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அஞ்சலகக் கண்காணிப்பாளர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், பிரம்மதேசம் காவல் ஆய்வாளர் சாரதி (பொ) வழக்குப் பதிவு செய்து, அஞ்சலக பெண் ஊழியர் துர்கா, அவரது கணவர் பாபு ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.