திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேரில் இருந்து திருடப்பட்ட சிற்பங்களை மீண்டும் அமைக்க வேண்டும் என்று நகர பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
திருவண்ணாமலை நகர பாஜக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரத் தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.கருணாகரன் முன்னிலை வகித்தார். நிர்வாகி ஆர்.மோகன் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் என்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், திருவண்ணாமலை நகரில் உள்ள பாதாள சாக்கடை, கழிவுநீர் கால்வாய்களை விரைவாக தூய்மைப்படுத்த வேண்டும். தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய குடிநீர், கழிப்பிட, மருத்துவ வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும்.
திருவிழா நாள்களில் வேங்கிக்கால், ரமணாஸ்ரமம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் திருட்டுச் சம்பவங்களை தடுக்க வேண்டும்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேரில் இருந்து திருடப்பட்ட சிற்பங்களை மீண்டும் ஆகம விதிப்படி அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், நகர பொதுச் செயலர்கள் கே.ஆறுமுகம், பி.செந்தில்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.