ஆரணி நகர அனைத்து வணிகர்கள் சங்க பேரமைப்பின் சார்பில், செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆரணி நகர வணிகர்கள் சங்கத் தலைவர் சி.எஸ்.நாராயணன் தலைமை வகித்தார்.
நகர வணிகர்கள் சங்கத்தின் செயலர் எஸ்.டி.செல்வம், பொருளாளர் செங்கீரன், நிர்வாகிகள் இ.சலீம் பேக், கே.எஸ்.சிவக்குமார் , எஸ்.செந்தில்குமார், டி.அருளாளன், வில்வநாதன், எ.எஸ்.கே.சுபானி, ஆர்யாஸ் சந்திரன், கிருஷ்ணா ஸ்டீல் பாபு, தேவராஜன், தனசேகரன், பூக்கடை ராஜா, கௌரி சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஆரணி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இருந்தும், பல்வேறு மருத்துவமனைகளுக்கு மருத்துவம் பார்க்கச் சென்று விடுவதால், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரிதும்
பாதிப்படைகின்றனர். இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால், திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க முடியாத சூழல் உள்ளது.
இந்த நிலை குறித்து ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு கோரிக்கை விடுப்பது, ஆரணியில் உள்ள தனியார் மருத்துவர்களை சந்தித்து, இரவு நேரங்களில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்துவது, ஆரணி அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை சங்கத்தின் சார்பில் வாங்கித் தருதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.