திருவண்ணாமலை அருகே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த வடகரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (58). இதே பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (60). இவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் அருகருகே உள்ளன. இந்த நிலத்தில் உள்ள வரப்பு தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறதாம்.
இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது, கோவிந்தசாமி, அவரது மகன் சிவா ஆகியோரும், கோபால், அவரது மனைவி சுகுணா, மகன் மணிகண்டன், உறவினர் சேகர் ஆகியோரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து, கோவிந்தசாமி மகன் சிவா, கோபால் ஆகியோர் மங்கலம் காவல் நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்தனர். போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து சேகர், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.