திருவண்ணாமலை அருகே சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருவண்ணாமலை அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2014 மார்ச் 25-ஆம் தேதி திருவண்ணாமலையை அடுத்த கானலாபாடி கிராமத்தைச் சேர்ந்த விஜியன் (37) கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2014 ஏப்ரல் 21-ஆம் தேதி சிறுமியின் தந்தை புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் விஜியனை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி புகழேந்தி, சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த குற்றத்துக்காக விஜியனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, விஜியன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.