திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தில் ஈஷா விவசாய இயக்கம் சார்பில், இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது.
ஈஷா விவசாய இயக்கம் சார்பில், இயற்கை விவசாயத்தில் பூச்சிகளை கையாளுவது எப்படி என்ற தலைப்பில் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
பூச்சியியல் வல்லுநர் நீ.செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
இதையொட்டி, விவசாயிகள் விளை நிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள பூச்சிகளைக் கண்காணித்தனர். அங்கு, நெல் பயிரில் இருந்த 20 வகையான பூச்சிகளைக் காட்டிய பூச்சியியல் வல்லுநர் நீ.செல்வம், பூச்சிகளைக் கண்டறிவது குறித்துப் பயிற்சி அளித்தார். மேலும், அந்திப்பூச்சி, வெட்டுக்கிளி, பட்டுப்பூச்சி ஆகியவற்றை வேறுபடுத்திக் கண்டறியும் பயிற்சியையும் அவர் அளித்தார். நன்மை விளைவிக்கும் பூச்சிகள், தீமை விளைவிக்கும் பூச்சிகள் குறித்தும் நீ.செல்வம் விளக்கினார். சர்க்கரை, வினிகர் ஆகியவற்றைக் கொண்டு பூச்சிகளைக் கவரும் இனக் கவர்ச்சி பொறி அமைப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், பூச்சிகள், தாவரங்கள், தட்ப வெட்பம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு, பூச்சிகளைக் கையாள வேப்பங்கொட்டைச்சாறு, தசபரணி கசாயம் உருவாக்குவது குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்தப் பயிற்சி முகாமில் 45 விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.