ஆரணியை அடுத்த திருமணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் 2016 } 17ஆம் ஆண்டுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மூத்த உறுப்பினர் டி.சம்பத் தலைமை வகித்தார். செய்யாறு உதவிப் பொறியாளர் வெங்கடாஜலபதி, பணி மேற்பார்வையாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சிச் செயலர் திருமலை வரவேற்றார்.
கூட்டத்தில், ரூ.53 லட்சம் செலவில் பெரிய ஏரி, சித்தேரி தூர்வாரியது மற்றும் கிராம சேவை மையக் கட்டடம் கட்டியதற்கான அறிக்கையை வட்டார வள அலுவலர் க.விசாகமூர்த்தி சமர்ப்பித்தார்.
மாவட்ட வள அலுவலர் (பொறுப்பு) டி.பிரபு, திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். கூட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்கள் அமுதா, ருக்குமணி, சுமித்ரா, மகளிர் குழுவைச் சேர்ந்த லோகநாயகி, அமுதா, சிறப்பு எழுத்தர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.