செங்கத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் புதன்கிழமை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
செங்கம் தமிழ்ச் சங்கம், கணேசர் குழுமம், திருவண்ணாமலை மாவட்ட கல்வித் துறை இணைத்து செங்கத்தில் நடத்தும் 10 நாள் புத்தகக் கண்காட்சி கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. புத்தகக் கண்காட்சியின் 4-ஆம் நாளான புதன்கிழமை ஆர்.ரவிச்சந்திரன் எழுதிய நீங்களும் ஆகலாம் அப்துல்கலாம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மகேஷ்வரி தலைமை வகித்தார். டாக்டர் வி.பி.ராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்ச் சங்க நிர்வாகி ராமஜெயம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கவிமாமணி பேராசிரியர் அப்துல்காதர் கலந்து கொண்டு நூலை வெளியிட்டதுடன், தனித்தமிழ் தமிழர் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் கு.வணங்காமுடி, செயலர் வழக்குரைஞர் கஜேந்திரன், பொருளாளர் தலைமை ஆசிரியர் ஜெயவேல் உள்பட தமிழ்ச் சங்க நிர்வாகிகள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், செங்கம் நகர பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விஷ்ணுபுரம், மேல்பென்னாத்தூர் அரசுப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்
நடைபெற்றன.