திரு வண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே வகுப்பறைக்குள் தண்ணீர் புகுந்ததால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கலசப்பாக்கத்தை அடுத்த காந்தப்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பழைய கட்டடத்தில் இயங்கும் இந்தப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் மேற்கூரை வழியாக கசிந்த மழைநீர் வகுப்பறைக்குள் தேங்கியது.
மேலும், பள்ளி மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கி, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
இதையடுத்து, பள்ளிக்கு எதிரே உள்ள சாலையில் மாணவ, மாணவிகள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மாணவர்களுடன் சேர்ந்து பெற்றோர்களும் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம், கடலாடி போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பள்ளியில் தற்போது நடைபெற்று வரும் புதிய வகுப்பறை கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு பணிகள் முடிக்கப்படும்.
பள்ளியில் கழிப்பறை வசதி செய்துதரப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.