திருவண்ணாமலை கிரிவலப் பாதை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் மாட வீதிகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை ரூ.63 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் மாட வீதிகளில் செய்ய வேண்டிய மேம்பாட்டுப் பணிகள், விரிவாக்கப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மாட வீதிகளில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும் அவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, நகராட்சி ஆணையர் பாரிஜாதம், வட்டாட்சியர் ஆர்.ரவி, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.