டெங்கு ஒழிப்புப் பணியில் ஓய்வு பெற்ற சுகாதாரப் பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்த சங்கத்தின் வந்தவாசி வட்டக் கிளை செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வந்தவாசி நகராட்சிப் பகுதியில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டை போக்க வேண்டும்.
ஓய்வு பெற்றோருக்கு மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும். வந்தவாசி நகராட்சிப் பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். சங்கத்தில் உறுப்பினர்களை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு வட்டக் கிளைத் தலைவர் எ.கமாலுதீன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.கே.கோவிந்தசாமி சிறப்புரையாற்றினார்.
மண்டலச் செயலர் எம்.மணி, துணைத் தலைவர் பி.குலசேகரன், வட்டப் பொருளாளர் ஈ.பலராமன், முன்னாள் பிரசாரச் செயலர் கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.