வந்தவாசி அருகே மரத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரைச் சேர்ந்தவர் அந்தோணிராஜா (52). இவருக்கு மனைவி லீமாரோஸ் மற்றும் 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அந்தோணிராஜா இரு சக்கர வாகனத்தில் வந்தவாசிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, தென்னாங்கூரில் உள்ள அரசு கலைக் கல்லூரி அருகே சென்றபோது வாகனம் நிலைதடுமாறி சாலையோர மரத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அந்தோணிராஜா வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.