வந்தவாசி அரசு மருத்துவமனையில் தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே பிரிவு, ரத்தப் பரிசோதனை ஆய்வகம் உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார். பின்னர், மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருபவர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி உடனிருந்த மருத்துவ அலுவலர் சிவப்பிரியாவுக்கு எம்எல்ஏ உத்தரவிட்டார்.
பின்னர், எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: வந்தவாசி அரசு மருத்துவமனையில் மர்மக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதிகள் இல்லை. மேலும், மருத்துவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.
நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்யவும் போதிய பணியாளர்கள் இல்லை. மர்மக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நகராட்சி ஆணையர் எஸ்.பார்த்தசாரதி, பொறியாளர் சந்திரசேகர், துப்புரவு ஆய்வாளர் ராமலிங்கம், திமுக மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி, ஒன்றியச் செயலர் டி.டி.ராதா, நகரச் செயலர் அ.பாபு, ஒன்றிய துணைச் செயலர் தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.