செய்யாறை அடுத்த அனக்காவூர் வட்டாரத்தில் கலவை ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் முகாமிட்டு வேளாண் பணிகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கலவை ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான ஜி.கோகுல், எஸ்.ஜெகதீஸ், வி.கலைச்செல்வன், கே.எஸ்.மோகன், கே.ஸ்ராவன்குமார், எம்.கிருஷ்ணராஜ், டி.கிருஷ்ணகாந்த், எம்.திருப்பதி ஆகியோர் அடங்கிய குழுவினர் வேளாண் அனுபவப் பயிற்சியாக சுமார் 2 மாதங்களாக அனக்காவூர் வட்டாரத்தில் முகாமிட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் புதன்கிழமை கோவிலூர் கிராமத்தில் அனக்காவூர் வேளாண் உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி மேற்பார்வையில், பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமாக செய்து காண்பித்தனர். தொடர்ந்து, வியாழக்கிழமை கோவிலூர் அரசுப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின்போது, செயற்கை உரங்களைத் தவிர்த்து இயற்கையான முறையில் விவசாயம் செய்ய வேண்டும். சொட்டு நீர் பாசன முறையில் அதிக மகசூல் பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.