ஆரணியை அடுத்த ஒகையூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 104 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு வட்டாட்சியர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஜி.கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், உழவர்கள் குழுக்கள் ஆரம்பித்து, அதன் மூலம் 80 சதவீத மானியத்தில் டிராக்டர் பெறலாம். அதை வைத்து நீங்கள் குறைந்த வாடகையில் நிலத்தை உழுது கொள்ளலாம். மேலும், நீங்கள் நிலம் வாங்கும்போது அதற்கு பட்டா உள்ளதா என தெரிந்து வாங்கவும். நீர் பிடிப்பு பகுதியில் உள்ள நிலங்களை வாங்க கூடாது. நீர் பிடிப்பு பகுதியில் எக்காரணம் கொண்டும் அரசு பட்டா வழங்காது. டெங்கு நோய் பரவாமல் தாடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
முகாமில் 128 மனுக்கள் பெறப்பட்டது. இதில் சிறு, குறு விவசாயி சான்று 68 பேருக்கும், வீட்டுமனைப் பட்டா 5 பேருக்கும், பட்டா மாறுதல் 18 பேருக்கும், முதியோர் உதவித்தொகை 2 பேருக்கும், நத்தம் புறம்போக்கு வீட்டுமனைப் பட்டா 9 பேருக்கும், இறப்புச் சான்று ஒருவருக்கும், சாதிச் சான்று ஒருவருக்கும் என 104 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன், இடர்பாடு நிவாரண வட்டாட்சியர் மனோகரன், மண்டல துணை வட்டாட்சியர்கள் வெங்கடேசன், ஓம்ஆனந்தராஜ், வருவாய் அலுவலர்கள் திருவேங்கடம், சரவணன், தேவி, கிராம நிர்வாக அலுவலர் அப்பாய், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.