செங்கத்தில் காவல் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில், செங்கம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, செங்கம் துக்காப்பேட்டையில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக போளூர் சாலை வரை பேரணியாகச் சென்றனர்.
அப்போது, இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதுடன், ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனங்களை ஓட்ட வேண்டும். மது அருந்திவிட்டும், செல்லிடப்பேசியில் பேசியபடியும் வாகனங்களை ஓட்டக்கூடாது என மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், சாலை விபத்துகளை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மாணவர்கள் விநியோகித்துச் சென்றனர்.
பேரணியில் காவல் ஆய்வாளர்கள் செங்கம் கர்ணன், மேல்செங்கம் பூபதி மற்றும், போலீஸார் கலந்து கொண்டனர்.